உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது. 3-வது சுற்றில் குகேஷ் 37-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் இருவரும் தலா 1.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்று நடைபெற்றது. குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினார்கள். இந்த சுற்றை 5 முறை உலக சாம்பியனான இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 2 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர். இன்று 5-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.