டெல் அவிவ், ஜூன் 28- ஊழல், முறைகேடு, மோசடி என மூன்று வழக்குகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நெருக்கடியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று வாய்தா கேட்டிருந்தார். இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகியிருந்த நெதன்யாகுவின் வழக்கறிஞர், “ஈரானுடனான போர் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு வழக்கு விசாரணையிலிருந்து ஆஜராக எனது கட்சிக்காரருக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் அவர் பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்” என்று கேட்டுக்கொண்டார். ஆனால் டெல் அவிவ் நீதிமன்றம், “விசாரணையை ரத்து செய்வதற்கோ, தாமதப்படுத்துவதற்கோ இந்த கோரிக்கைள் ஏற்புடையதாக தெரியவில்லை. அவரை நேரில் ஆஜராக சொல்லுங்கள்” என்று கறாராக கூறிவிட்டது.