காசா: ஜூன் 28 காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது தினமும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது உணவு வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் பொதுமக்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த சொல்லி தங்கள் தளபதிகள் உத்தரவிட்டிருப்பதாக இஸ்ரேல் வீரர்கள் கூறியுள்ளனர் என்று இஸ்ரேலிய செய்தி ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ தெரிவித்திருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணிகளை ‘காசா மனிதாபிமான அறக்கட்டளை’ (GHF) செய்து வருகிறது. இது ஒரு அமெரிக்க அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம் உதவிகளை பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள் என்று புகார்கள் எழுந்து வந்தன. தற்போது இந்த குற்றச்சாட்டை, ‘ஹாரெட்ஸ்’ செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. இந்த ஊடகத்திற்கு பேட்டியளித்த இஸ்ரேல் வீரர்கள், “நாங்கள் டாங்கிகளிலிருந்து இயந்திர துப்பாக்கிகளால் சுட்டோம், கையெறி குண்டுகளை வீசினோம். பாலஸ்தீனர்கள் மீது கண்மூடித்தனமாக சுட எங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. உதவி தேடி வந்தவர்களில் பலர் முதியவர்கள், பெண்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளைத் தேடி வந்த குழந்தைகளும் இருந்தனர்” என்று கூறியுள்ளனர்.