வாஷிங்டன்: ஜூலை 3-
சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது. மறுபக்கம் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க திட்டமிட்டது. அது எங்களை குறிவைக்கும்’ என்று, இஸ்ரேல் கூறியது. இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் அமெரிக்காவும் இணைந்தது.
இந்தப் போரின் ஒரு பகுதியாக ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களான போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவற்றை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கின. ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் இருந்து, 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது ஈரான் அணு ஆயுத திட்டங்களை சீரமைத்து வருவதாக தெரிகிறது. இதனிடையே, ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டார். ஈரான் பார்லிமென்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் இதற்கு ஒப்புதல் அளித்தார். ஈரானின் இந்த செயல் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.