சென்னை: ஏப்ரல் 26 –
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான அண்ணா சாலை பகுதியில் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றம் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழி மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, பணி நடைபெறும் இடங்களில் கடந்த 20 முதல் 22-ம் தேதிவரை வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதாவது, தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடைய ஏற்பாடு செய்யப்பட்டது.சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்பட்டன. அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடைய வசதி செய்யப்பட்டது.