தெஹ்ரான்: ஜூன் 24-
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இதை ஈரான் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேல் தாக்கவில்லை என்றால் ஈரான் பதில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கம் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 12 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் போர்நிறுத்தம் அமலாகும் என ட்ரம்ப் கூறினார். இதை ஈரான் மறுத்தது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் நாட்டு ராணுவத்துக்கு நன்றி தெரிவித்தார். இது போர் நிறுத்தத்தை மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் உள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் சொன்னது என்ன? – “இஸ்ரேலின் அத்துமீறலுக்கு பதிலடி தரும் வகையில் நமது தேசத்தின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு படையினர் தீவிரமான ராணுவ நடவடிக்கையை கடைசி நிமிடம் வரை தொடர்ந்தனர். அதிகாலை 4 மணி வரையில் அது நீடித்தது. கடைசி சொட்டு ரத்தம் சிந்தும் வரை தேசத்தை பாதுகாக்கும் வகையில் ராணுவத்தினர் செயல்பட்டனர். கடைசி நிமிடம் வரை எதிரியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர். ஈரான் மக்களுடன் சேர்ந்து ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறினார். முன்னதாக, “இஸ்ரேல் தான் ஈரான் மீது முதலில் போர் தொடுத்தது. இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. இந்த தாக்குதலை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் நிறுத்தினால், அதன் பின்னர் எங்களது பதிலடியை தொடரும் நோக்கம் எங்களுக்கு இல்லை” என அப்பாஸ் அரக்சி தெரிவித்திருந்தார். ட்ரம்ப் சொன்னது என்ன? – “அனைவருக்கும் வாழ்த்துகள்! இஸ்ரேல் – ஈரான் இடையே 12 மணி நேரத்தில் (தோராயமாக 6 மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரான் தங்களுடைய இறுதி மிஷன்களை நிறைவு செய்த பிறகு) முழுமையான போர் நிறுத்தம் ஏற்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கட்டத்தில் போர் முடிந்ததாகக் கருதப்படும். அதிகாரபூர்வமாக, ஈரான் இந்த போர் நிறுத்தத்தை தொடங்கும். 12-வது மணி நேரத்தில், இஸ்ரேல் இந்த போர் நிறுத்தத்தை தொடங்கும். 24-வது மணி நேரத்தில், இந்த 12 நாள் போரின் அதிகாரபூர்வ முடிவு, உலகத்தால் வரவேற்கப்படும். ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியும் மதிப்பும் நிலவும். எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் இந்த 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் புத்திசாலித்தனம் பெற்றதற்கு நான் வாழ்த்துகிறேன். இது பல ஆண்டுகளாக நடந்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக் கூடிய ஒரு போர். ஆனால், அது நடக்கவில்லை. ஒருபோதும் அப்படி நடக்காது. கடவுள் இஸ்ரேலை ஆசிர்வதிப்பாராக. கடவுள் ஈரானை ஆசிர்வதிப்பாராக. கடவுள் மத்திய கிழக்கை ஆசிர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பாராக. கடவுள் உலகை ஆசிர்வதிப்பாராக” என்று தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.