வாஷிங்டன், ஜூன் 29- ‘’இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு செய்வது மிகவும் கொடூரமானது. அவர் ஒரு போர் வீரர்’’ என வழக்கு விசாரணைக்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு மீது நடைபெற்று வரும் ஊழல் வழக்கு விசாரணைக்கு அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து, டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு அவர்கள் செய்வது மிகவும் கொடூரமானது. அவர் ஒரு போர்வீரர், ஈரானில் உள்ள ஆபத்தான அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதில் அமெரிக்கா உடன் இணைந்து பணியாற்றி அற்புதமான பணியைச் செய்த பிரதமர். முக்கியமாக, அவர் இப்போது ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதில் பிணைக்கைதிகளை திரும்பப் பெறுவதும் அடங்கும். இஸ்ரேலின் பிரதமரை நாள் முழுவதும் நீதிமன்ற அறையில் உட்கார வைப்பது எப்படி சாத்தியம். இது ஒரு அரசியல் சூனிய வேட்டை. ‘நீதி’யின் இந்த கேலிக்கூத்து ஈரான் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தைகளில் தலையிடும். இஸ்ரேலைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும், அமெரிக்கா ஒரு வருடத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகிறது. வேறு எந்த நாட்டிற்கும் செலவிடுவதைவிட மிக அதிகம்.
பிரதமர் நெதன்யாகு தலைமையில் நாம் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றோம். இந்த வழக்கு விசாரணைகள் நமது வெற்றியைப் பெரிதும் கெடுக்கிறது. அவர் (நெதன்யாகு) செய்ய வேண்டிய ஒரு பெரிய வேலை இருக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.