நியூயார்க்: ஜூன் 26 –
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர். 41 ஆண்டுகளுக்கு பின், விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற்றுள்ளார்.
நம் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் ‘ககன்யான்’ திட்டத்தை 2027ல் செயல்படுத்த திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது.
அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த இஸ்ரோ தீர்மானித்தது. இதையடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இஸ்ரோ இணைந்தது.
அதன்படி, ‘ஆக்சியம் – 4’ திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 39, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
முதலில் கடந்த மே 29ம் தேதி, விண்வெளிக்கு நால்வரும் பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வானில் நிலவும் சீதோஷ்ண நிலை, தொழில்நுட்ப பிரச்னை என ஆறு முறை விண்வெளி பயணம் தள்ளிப்போடப்பட்டது.
இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று பகல் 12:01 மணிக்கு, நான்கு பேரும் விண்வெளிக்கு புறப்பட்டனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, தொழிலதிபர் எலான் மஸ்கின், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் – 9’ ராக்கெட் வாயிலாக, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரையும் சுமந்து, ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் புறப்பட்டது.
இதையடுத்து, விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெறுகிறார். விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்லும் முதல் வீரர் என்ற பெருமையும் அவரை சேரும்.
கடந்த 1984ம் ஆண்டு, ரஷ்யாவின் ‘சோயுஸ்’ விண்கலம் வாயிலாக, நம் விமானப் படையின் விங் கமாண்டர் ராகேஷ் சர்மா விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.
தற்போது 41 ஆண்டுகள் கழித்து, இந்தியாவைச் சேர்ந்த இரண்டாவது வீரராக சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும் விண்வெளியில் 28 மணி நேரம் பயணம் செய்து, இன்று மாலை 4:30 மணிக்கு, பூமியில் இருந்து 400 கி.மீ., தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைகின்றனர். அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். மொத்தம் 60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில், ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் பிராண வாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள் வளர்ச்சி உள்ளிட்ட ஆய்வில் சுக்லா ஈடுபடுவார். மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, நம் நாட்டின் மிக முக்கிய பிரமுகர் ஒருவருடன் அவர் பேசுவார் எனவும் கூறப்படுகிறது.