Home Front Page News ஹோர்முஸ் நீரிணை விவகாரம்; சீனாவை அழைக்கும் அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்; சீனாவை அழைக்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: ஜூன் 23 –
ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்துமாறு சீனாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவுறுத்தியுள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்து வரும், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. உலகத் தேவைகளில் 20 சதவீதம் கச்சா எண்ணெயை இந்த நீரிணை வழியாகத் தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, அந்த நீரிணையை ஈரான் அரசு மூடுவதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்துமாறு சீனாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; ஹோர்முஸ் நீரிணையை மூடும் முடிவை திரும்பப் பெறுமாறு ஈரான் அரசிடம் வலியுறுத்த சீனாவை அழைக்கிறேன். ஏனெனில் ஹோர்முஸ் நீரிணை வழியாக தான் அவர்களின் பெரும்பாலான எண்ணெய் தேவை பூர்த்தியாகிறது. ஹோர்முஸ் நீரிணையை மூடுவது மற்றொரு பெரிய தவறாக முடியும். அவர்களுக்கு இது பொருளாதார தற்கொலைக்கு சமம். அதை சமாளிக்க எங்களிடம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மற்ற நாடுகளும் இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இது எங்கள் நாட்டை விட மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். எதிர்காலத்தில் ஈரானின் செயல்களால் நாம் அவர்களை மதிப்பிடுவோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பினால், நாங்களும் பேச்சுவார்த்தை நடத்த தயார். ஆபத்தான நடவடிக்கைகளுக்கு செல்ல விரும்பினால், அதற்கான பதிலடிகளும் எங்களிடம் உள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version