சீனா, ஜூன் 21-
பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் இணைய உள்ளது.
இந்திய விமானப் படையில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானம் எதுவும் இல்லை. இத்தகைய விமானங்களை இந்தியா உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்க உள்ளது. அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராப்ட் (ஏஎம்சிஏ-ஆம்கா) எனப்படும் இந்த விமானங்களை 2035-ல் இந்திய விமானப் படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய விமானப் படை முன்னாள் விமானியும் பாதுகாப்பு விமர்சகருமான குரூப் கேப்டன் அஜய் அலாவத் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க உள்ளது. இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதற்காக பாகிஸ்தானால் நியமிக்கப்பட்ட போர் விமானிகள் குழு 6 மாதங்களுக்கும் மேலாக பயிற்சிக்காக சீனாவில் உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்க இருப்பது எப்சி-31 ரக விமானம் ஆகும். இது சீனா தற்போது வைத்திருக்கும் ஐந்தாம் தலைமுறை ஜே-35 ரக விமானத்தை விட சற்று குறைந்த போர்த் திறனை கொண்டிருக்கும். ஏனெனில் அதிகபட்ச போர்த் திறனை கொண்டிருக்கும் ஒரு விமானத்தை எந்த நாடும் மற்றொரு நாட்டுக்கு வழங்காது.
பாகிஸ்தானை விட இந்திய விமானப்படை நீண்ட காலமாக வலுவாக இருந்து வருகிறது. சிறந்த பயிற்சி, உத்திகள், ஆயுத மேலாண்மை என பல வகையிலும் பாகிஸ்தானை விட இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்த வகை விமானம் வழங்கப்படுவது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.
இதற்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிப்பதற்கான நமது முயற்சிகளை நாம் இயன்றவரை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற மற்றொரு அதிகாரி ஏர் மார்ஷல் சஞ்சீவ் கபூர் கூறுகையில், “இரு பக்கமும் எதிரிகளை வைத்துக்கொண்டு ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்காக 9-10 ஆண்டுகள் நாம் காத்திருக்க முடியாது. இடைக்கால ஏற்பாடாக தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை நாம் கொள்முதல் செய்யலாம்” என்றார்.