வாஷிங்டன், ஜூன் 23— கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது. 172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஒரு போர் விமானத்தில் 40,000 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கி.மீ. வரை தரையிறங்காமல் பறக்கும். இது மணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 50,000 அடி உயரம் வரை பறக்கும். அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் 21 பி-2 போர் விமானங்கள் உள்ளன. ஒரு விமானத்தின் விலை ரூ.18,000 கோடி ஆகும். அமெரிக்காவின் எப். 16, எப்.35 ரக போர் விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
ஆனால் பி-2 ரக போர் விமானங்களை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா விற்பனை செய்யவில்லை. இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளிடம்கூட பி-2 போர் விமானங்கள் இல்லை.ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 7 பி-2 போர் விமானங்களும்,
அமெரிக்காவின் மிசோரி மாகாணம், வெயிட்மேன் விமானப்படைத் தளத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன. ஒவ்வொரு பி-2 விமானத்திலும் இரு ஜிபியு-57 வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன. இரு விமானிகள் இணைந்து விமானத்தை இயக்கினர். அமெரிக்காவில் இருந்து ஈரானுக்கு செல்லும் வழியில் பி-2 போர் விமானங்கள் வேறு எங்கும் தரையிறங்கவில்லை. சுமார் 37 மணி நேரம் போர் விமானங்கள் தொடர்ச்சியாக பறந்தன. நடுவானிலேயே 7 போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஈரான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு அந்த நாட்டின் 3 அணு சக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. பின்னர் 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திரும்பின