Home Front Page News கத்தார் மீது ஈரான் தாக்குதல்: சவுதி அரேபியா கண்டனம்

கத்தார் மீது ஈரான் தாக்குதல்: சவுதி அரேபியா கண்டனம்

சவுதி அரேபியா: ஜூன் 24-
அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், ‘ஈரானின் செயலை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது’ என்று சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சர்வதேச சட்டம் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கைகளை வெளிப்படையாக மீறும் வகையில், சகோதரத்துவ நாடான கத்தாருக்கு எதிராக ஈரான் தொடுத்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறது. இது எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாத, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தங்களது 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் முடிவு செய்தது. அதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version