Home Front Page News காதலியை கொன்று உடலை பதப்படுத்திய டாக்டர்

காதலியை கொன்று உடலை பதப்படுத்திய டாக்டர்

வேலூர், ஜன. 31 காதலியை கொலை செய்து சடலத்தின் மீது ரசாயனத்தை ஊற்றி பதப்படுத்திய மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (78). இவரது மகள் சிந்தியா (37). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தந்தை சாமுவேலுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற வசதியாக சென்னையை அடுத்த ஆவடி திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் சிந்தியாவுடன், சாமுவேல் சங்கர் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சாமுவேல் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் நினைத்துள்ளனர். ஆனாலும், அவ்வப்போது அவர்களது வீட்டிலிருந்து லேசான துர்நாற்றம் வீசியுள்ளது. ஏதாவது எலி இறந்து, அதன் மூலம் துர்நாற்றம் வீசி இருக்கலாம் என அண்டை வீட்டார் நினைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கத்தைவிட அதிகளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, சாமுவேல் சங்கரின் உறவினர்களும், அவரைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தனர்.இதையடுத்து, திருமுல்லைவாயல் போலீஸார் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, 2 உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. அவை, சாமுவேல், சிந்தியாவின் சடலங்கள் என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அவற்றை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கினர். முதல்கட்டமாக சிந்தியாவின் செல்போன், சைபர் க்ரைம் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், சிந்தியாவோடு கடைசியாக யார் யாரெல்லாம் பேசினார்கள் என்பதை கண்டறிந்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஓமியோபதி மருத்துவர் சாமுவேல் எபினேசர்(34) என்பவர் சிந்தியாவுடன் அடிக்கடி பேசி வந்ததும், வாட்ஸ்அப்பில் தகவல்களை பரிமாறி இருப்பதும் தெரியவந்தது.அவரை தனியாக விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே சிந்தியாவை அடித்து கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்த சிந்தியாவுக்கு மருத்துவரான சாமுவேல் எபினேசருடன் இன்ஸ்டாகிராம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். எபினேசர் மருத்துவர் என்பதால், அவரது ஆலோசனைப்படி, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார் சந்தியா.
வேலூரில் இருந்து அடிக்கடி சென்னை வந்து சிகிச்சை பெறுவது சிரமம் என்பதால், அவர்களுக்கு திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்து கொடுத்துள்ளார் எபினேசர். இதையே சாதமாக பயன்படுத்தி, சிந்தியா வீட்டுக்கே அடிக்கடி சென்று அவரது தந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்துள்ளார். இதனால் சந்தியாவுடன் அவருக்கு நெருக்கம் அதிகமாகி உள்ளது.

Exit mobile version