Home Front Page News அணுசக்தி திட்டங்கள் தொடரும்: ஈரான் திட்டவட்டம்

அணுசக்தி திட்டங்கள் தொடரும்: ஈரான் திட்டவட்டம்

டெஹ்ரான்: ஜூன் 25-
ஈரான் அணுசக்தி திட்டங்களை குறி வைத்தே, அதன் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தின. தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், ‘எங்களுடைய அணுசக்தி திட்டங்கள் தொடரும்’ என, ஈரான் கூறியுள்ளது.
ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது. மறுபக்கம் ‘ஈரான் அணுசக்தியை அணு ஆயுதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது; அது எங்களை குறிவைக்கும்’ என்று, இஸ்ரேல் கூறியது.
இதையடுத்தே, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் அமெரிக்காவும் இணைந்தது.
ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களான போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவை தாக்கப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறுகின்றன.
ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் இருந்து, 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது இஸ்லாமி, இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட ‘ஆட்டம் இன்னும் முடியவில்லை.
இதுபோன்று தாக்குதல்கள் நடந்தால் எப்படி யுரேனியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு ஏற்கனவே திட்டங்கள் வகுத்து வைத்திருந்தோம்’என்று கூறியுள்ளார்.
அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டால், மீண்டும் உற்பத்தியை துவங்குவது தொடர்பாக விரிவான திட்டங்கள் தங்களிடம் உள்ளதாக அவர் கூறி உள்ளார்.
இதன் வாயிலாக, யுரேனியம் செறிவூட்டல் பணிகள் எந்தத் தடையும் இல்லாமல் தொடர்வதற்கு எப்போதும் தயாராகவே இருந்தோம் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
தற்போதைக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், யுரேனியத்தை செறிவூட்டுவது, அணுசக்தி திட்டங்கள் எப்போதும்போல் தொடர்ந்து நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version