புதுடெல்லி: ஜூன் 25-
அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தின் துயர்மிகு அனுபவங்களை சந்தித்தோர் அதனை சமூக ஊடகங்களில் பகிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டது. அதன் 50-வது நினைவு நாளான இன்றைய தினத்தை பாஜக ‘அரசியலமைப்பு படுகொலை நாளாக’ ( Samvidhan Hatya Diwas ) அறிவித்துள்ளது.
இதனை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர், “இந்திய ஜனநாயக வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்தும் அவசரநிலையின் 50-வது ஆண்டு நாள் இன்று. இந்திய மக்கள் இந்த நாளை ‘அரசியலமைப்பு படுகொலை நாளாக’ நினைவுகூர்கின்றனர். இந்த நாளில் இந்திய அரசமைப்பு வகுத்துக் கொடுத்த மதிப்பீடுகள் புறந்தள்ளப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. ஊடகச் சுதந்திரம் பறிக்கப்பட்டது, அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாமான்ய மக்கள் எனப் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய நெருக்கடிகள் மூலம் காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தையே சிறை வைத்தது.
நமது அரசமைப்பின் ஆன்மா சிதைக்கப்பட்ட விதத்தை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். நாடாளுமன்றத்தின் குரல் வெளிவராமல் தடுக்கப்பட்டது. நீதிமன்றங்களையே கட்டுப்படுத்தும் முயற்சிகள் கூட மேற்கொள்ளப்பட்டன. 42-வது சட்டத்திருத்தம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், நலிந்த மக்களே குறிவைக்கப்பட்டனர். அவர்களின் அடையாளம் சிதைக்கப்பட்டது.
இந்த நாளில், அவசரநிலையை எதிர்த்து நின்ற ஒவ்வொருவருக்கும் எங்கள் வணக்கத்தை உரித்தாக்குகிறோம். பல்வேறு சித்தாத்தங்களைக் கொண்ட, பல தரப்பு மக்களும் அவசரநிலையை எதிர்த்து நின்றனர். அவர்கள் அனைவரும் இந்தியாவின் ஜனநாயக தன்மை காக்கப்பட வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றுபட்டனர். நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தவர்களின் எண்ணங்களை பேணும் பொருட்டு அவர்கள் ஒன்றிணைந்தனர். அவ்வாறு ஒன்று திரண்டோரின் ஒருமித்த போராட்டத்தினால்தான் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி தேர்தலை எதிர்கொள்ள நெருக்கடியைக் கொடுத்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த நாளில் நமது அரசமைப்பு கோட்பாடுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதியேற்கிறோம். அது நம் அகண்ட பாரத கொள்கையை நோக்கி நமை செலுத்தும். வளர்ச்சிப் பாதையில் நாம் புதிய உயரங்களை எட்டுவோம். ஏழைகள், நலிந்த மக்களின் கனவுகளை நனவாக்குவோம். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது நான் ஆர்எஸ்எஸ் தொண்டனாக இருந்தேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தில் நான் இருந்தது, எனக்கு மிகப்பெரிய படிப்பினை. அது, நம் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. அதேவேளையில், அரசியல் அரங்கிலிருந்து பலரது வாயிலாகவும் பல விஷயங்களையும் நான் கற்றுக் கொண்டேன். இந்த நாளில், அவசரநிலை காலத்தில் வாழ்ந்தோர் அவர்கள் அனுபவித்த இன்னல்களை, இருண்ட காலத்தைப் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களின் வாயிலாக நினைவுகூர நான் வேண்டுகிறேன். அது, 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலக்கட்டத்தை இக்கால இளைஞர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.