Home Front Page News பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர் கைது

புதுடெல்லி: ஜூன் 26 –
ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட கடற்படை ஊழியரை ராஜஸ்தான் சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு தக்க பாடத்தை இந்திய ராணுவம் புகட்டியது. அதன்பிறகு, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர்களை கண்டறிந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு, இந்திய பாதுகாப்பு ரகசியங்களை கசிய விட்ட, கடற்படையின் தலைமையக ஊழியரை சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி விஷ்ணுகாந்த் குப்தா கூறுகையில், ‘பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த பிரியா ஷர்மா என்று கூறிக் கொள்ளும் பெண்ணுடன், டில்லியில் உள்ள கடற்படை தலைமையக ஊழியர் விஷ்ணு யாதவ் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த விஷ்ணு யாதவ், இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை பகிர்வதற்கு சன்மானமாக, அந்தப் பெண்ணிடம் பணத்தை பெற்று வந்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையான விஷ்ணு யாதவ், அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. வர்த்தக கணக்கு மூலம் கிரிப்டோ கரன்சியாக பணத்தை பெற்று வந்துள்ளார். இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.

Exit mobile version