மும்பை: மே 26-
மும்பையில் பல இடங்களில் பெய்த கன மழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்தது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
கேரளா, மும்பை, மஹாராஷ்டிரா, தெற்கு ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா, தானே, பால்கர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நவி மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கல்யாண் நோக்கிச் செல்லும் மெதுவான ரயில்கள் ஐந்து நிமிடங்கள் தாமதமாகவும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் சுமார் பத்து நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்பட்டன. நேற்று இரவு மும்பையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
காற்று வீசும்
60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மும்பை மக்கள் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மஹாராஷ்டிராவில், புனே, கோலாப்பூர், சதாரா மற்றும் அகமதுநகர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மே 26ம் தேதி ரோஸி, மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மஹாராஷ்டிராவில் பருவமழை முன்பே துவங்கி விட்டதால், மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.