புதுடில்லி: ஜூன் 28 டில்லியில் நடந்த ஆச்சாரியா வித்யானந்த் மகராஜ் 100வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் மற்றும் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பிரதமருக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நூற்றாண்டு விழா 2025 ஜூன் 28 முதல் 2026 ஏப்ரல் 22-ம் தேதி வரை கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார, இலக்கிய, கல்வி மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ், கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் பகுதியில் 1925ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே தீட்சை பெற்ற அவர், 8,000க்கும் மேற்பட்ட சமண ஆகமங்களை மனப்பாடம் செய்து, சிறந்த சமண அறிஞர்களில் ஒருவராக திகழ்ந்தார்.சமண தரிசனம், அனேகாந்த்வாத் மற்றும் மோக்ஷமார்க் தரிசனம் உள்ளிட்ட சமண தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்த 50க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். கயோத்சர்க தியானம், பிரம்மச்சாரியத்தை முறையாக கடைபிடித்து, பல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களில் காலணி இன்றி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.1975ம் ஆண்டு, பகவான் மகாவீரரின் 2500வது பெருவிழாவையொட்டி, அனைத்து முக்கிய சமணப் பிரிவுகளின் ஒப்புதலுடன், அதிகாரப்பூர்வ சமணக் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியதில் ஆச்சார்ய வித்யானந்த் முக்கியப் பங்காற்றினார்.