டெஹ்ரான், ஜூன் 23- இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷிய அதிபர் புதினுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்குள் அமெரிக்காவும் நுழைந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் ரஷ்யா அமைத்துள்ள அணுசக்தி தளம் செயல்பட்டு வருகிறது. ஈரானின் அணுசக்தி, ஏவுகணைத் திட்டங்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதி ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் சார்பில் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமர் புதினை, இன்று (ஜூன் 23) சந்திக்கவுள்ளார். இதுதொடர்பாக இஸ்தான்புல்லில் நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரேல், அமெரிக்கா எங்களது நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கி எல்லையை மீறிவிட்டனர்.
இது ஆபத்தான தாக்குதலாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான ஈரான் தங்களைப் பாதுகாக்கும். நான் ரஷ்யா தலைநகரான மாஸ்கோவிற்கு செல்கிறேன். ரஷ்ய அதிபர் புதினை ஜூன் 23 ஆம் தேதி (இன்று) சந்தித்து இந்த தாக்குதல் தொடர்பாக தீவிரமான ஆலோசனை நடத்தவுள்ளோம். ஈரான் மற்றும் ரஷ்யா எப்போதும் எங்கள் நிலை குறித்து கலந்தாலோசனை செய்து ஒருங்கிணைந்து பயணிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.