புதுடில்லி, ஜூன் 21- தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர், 45 நாட்களுக்குள் வழக்கு தொடராவிட்டால், ஓட்டுப்பதிவின்போது எடுக்கப்பட்ட ‘சிசிடிவி’ கேமரா, ‘வெப்காஸ்டிங்’ மற்றும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கட்ட தேர்தல்களுக்கு ஏற்ப ஓட்டுப்பதிவு முதல், ஓட்டு எண்ணிக்கை வரையிலான வீடியோ, புகைப்படக் காட்சிகள் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டன.இந்த நிலையில், அந்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொதுவெளியில் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் கமிஷன் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.பொதுவாக தேர்தல் முடிவுகளை எதிர்த்து, 45 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வேட்பாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். ஒருவேளை, 45 நாட்களுக்குள் வேட்பாளர்கள் வழக்கு தொடராவிட்டால் சம்பந்தப்பட்ட வீடியோவை அழித்து விடும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தேர்தலில் பதிவான ‘சிசிடிவி’ காட்சிகளை வேட்பாளர்களுக்கு வழங்கத் தேவையில்லை என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து ‘சிசிடிவி’ காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது. இந்த நிலையில், தேர்தலில் பதிவாகும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை 45 நாட்கள் மட்டும் மாநில தேர்தல் அதிகாரிகள் பாதுகாத்தால் போதும் என்று, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகள், மே 30ம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.