கர்னூல்: ஜூன் 24-
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு மிக அருகே சாலையில் கிடந்த ஒரு பையில் வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆந்திர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இக்கோயிலுக்கு மிக அருகே வாசவி சத்திரத்தின் எதிரே உள்ள சாலையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்துள்ளது. இதனை காரில் சென்ற பக்தர்கள் பார்த்து ஸ்ரீசைலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வெடிகுண்டு நிபுணர்கள் குழுவின் உதவியோடு, அந்த பையை கைப்பற்றி சோதனையிட்டனர்.
அப்போது அந்த பையில் 4 நாட்டு கையெறி குண்டுகள், 9 பெரிய தோட்டாக்கள், 4 சிறிய ரக தோட்டக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஸ்ரீசைலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, யார் இந்த பையை இங்கே விட்டுச் சென்றது என கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் பின்னனியில் ஏதாவது நாச வேலை இருக்குமோ ? எனும் கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.