Home Front Page News நடுவானில் இயந்திர கோளாறு 154 பயணிகளுடன்விமானம் தப்பியது

நடுவானில் இயந்திர கோளாறு 154 பயணிகளுடன்விமானம் தப்பியது

மும்பை: ஜூன் 28 –
மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள், 154 பேருடன் நள்ளிரவில், சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக, மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது.
மும்பையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு (ஜூன் 27) 11 மணிக்கு, 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் அந்த விமானம் தாமதமாக, நள்ளிரவு 12 மணிக்கு, சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம், நடுவானில் சென்னையை நோக்கி பறந்து கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை, விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விட்டு, மீண்டும் விமானத்தை திருப்பி கொண்டு சென்று, மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.
விமானப் பொறியாளர்கள் குழுவினர் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இயந்திர கோளாறுகளை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். ஏர் இந்தியா விமான நிறுவனம் மாற்று விமானத்தை பயணிகள் அனைவருக்கும் ஏற்பாடு செய்தது.
இந்த விமானம் இன்று (ஜூன் 28) அதிகாலை 4.35 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டு, காலை 6.05 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது. மும்பையில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக, மும்பைக்கே திரும்பி சென்று, அதன் பின்பு மாற்று விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, மீண்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தது.
இதன் காரணமாக, அந்த விமானம் சுமார் 5 மணி நேரம் தாமதமாக, சென்னைக்கு வந்து சேர்ந்தது. இதனால் விமானத்தில் வந்த 148 பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Exit mobile version