வாஷிங்டன்: ஜூலை 8-
அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான தகுதி, வேறு எவரை காட்டிலும் தனக்கே இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புகிறார். சமீபத்தில் அவர் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அதிருப்தி தெரிவித்திருந்தார். டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று, நோபல் கமிட்டிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் சிபாரிசு செய்து இருந்தது.
இந்த நிலையில், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது டிரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தை வழங்கினார். ‘நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. அதிபர் டிரம்ப் அதைப் பெற வேண்டும்’ என்று நெதன்யாகு கூறினார். குறிப்பாக மத்திய கிழக்கில், நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் டிரம்பின் தலைமையை இஸ்ரேல் பிரதமர் பாராட்டி உள்ளார்.