புதுடெல்லி: ஜூன் 27 –
இமாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை பாதிப்பு, விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. இமாச்சல பிரதேசத்தில் மணாலி, ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்ட்ரோ, ஹோரன்கர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளின் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இமாச்சலின் தரம்சாலா பகுதி, கன்னியாரா கிராமத்தில் நீர்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதி சாலைகள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன.
இந்த சூழலில் உத்தராகண்டின் பத்ரிநாத் கோயிலுக்கு 20 பக்தர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். கோல்திர் பகுதியில் பேருந்து சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அலக்நந்தா ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 9 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மழை வெள்ளத்தால் உத்தராகண்டின் கேதார்நாத் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சுமார் 1,300 சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே சிக்கி உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிர முயற்சி செய்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ரஜோரி, பூஞ்ச், தோடா பகுதிகளில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இந்தப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தில் 7 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ரஜோரியை சேர்ந்த 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். நிலச்சரிவு காரணமாக ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயில் மூடப்பட்டு உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குஜராத்தில் அகமதாபாத், சூரத் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.