Home செய்திகள் உலக செய்திகள் 18-வது முறையாக இந்தியா- பாக் போர் நிறுத்த பெருமை பேசிய ட்ரம்ப்

18-வது முறையாக இந்தியா- பாக் போர் நிறுத்த பெருமை பேசிய ட்ரம்ப்

ஹேக், ஜூன் 26- இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறுவது இது 18-வது முறையாகும்.இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டதில் இருந்தே, இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி அண்மையில் தொலைபேசி உரையாடலில் தெளிவுப்படுத்தி இருந்தார்.ஆனால் அதன் பின்னரும் கூட இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். “இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நான் நேற்று பேசினேன். இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான்.பாகிஸ்தான் தரப்பில் அசிம் முனீர் மற்றும் இந்தியா தரப்பில் பிரதமர் மோடி என போரை நிறுத்த உதவினர். அவர்கள் இருவரும் செல்வாக்கு மிக்க நபர்கள். இரு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்டவை. இது நான் எழுதிய கதை அல்ல என நம்புகிறேன். போரை நிறுத்தியது நான்தான்” என ட்ரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது, ஹேக் நகரில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நான் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிகையில் இந்தியா – பாகிஸ்தான் போரை முக்கியமானதாகக் குறிப்பிடலாம். அவர்கள் இருவருடனும் நான் தொலைபேசியில் பலமுறை பேசினேன். வர்த்தக உறவுகள் பற்றி உறுதியளித்தேன். அதன் மூலம் மோசமாகிக் கொண்டிருந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்றேன்.” என்று கூறினார்.

Exit mobile version