Home செய்திகள் தேசிய செய்திகள் இந்திய பொருளாதாரத்தில் தடுமாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர்

இந்திய பொருளாதாரத்தில் தடுமாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர்

புதுடெல்லி, நவ.15-
நாட்டின் பொருளாதாரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நிய செலாவணி கையிருப்பு, சைபர் செக்யூரிட்டி ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று கூறியதாவது: பொருளாதார ரீதியாக சர்வதேச அளவில் சவாலான சூழல் காணப்படுகிறது. ஆனால், இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றம் இல்லாமல் பயணிக்கிறது. உள்நாட்டு அடிப்படை பொருளாதார செயல்பாடுகள் வலுவாக இருப்பதே இதற்குக் காரணம்.
தற்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், அதுகட்டுப்படுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளது. சேவை ஏற்றுமதி வலுவாக உள்ளது. சரக்கு ஏற்றுமதி தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் உலகின் நான்காவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, 682 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிக்கடனையும், நடப்பு ஆண்டின் இறக்குமதி செலவுகளையும் சமாளிக்க இது போதுமானது ஆகும்.
சைபர் குற்றங்களை தடுக்கும் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சைபர் செக்யூரிட்டி மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version