Home செய்திகள் தேசிய செய்திகள் சந்திரபாபு, பவன்கல்யாண் குறித்து விமர்சனம்: நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு

சந்திரபாபு, பவன்கல்யாண் குறித்து விமர்சனம்: நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு

அமராவதி, நவ.15-
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சரான அனிதா மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஐடி பிரிவினர் அநாகரிகமான பதிவுகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக தற்போது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின்பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், அனிதா ஆகியோர் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி சமூக வலைதளங்களில் அநாகரிகமான பதிவுகளை வெளியிட்டு வந்தார். இவரை போலவே பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, நடிகர் போசானி கிருஷ்ணமுரளி ஆகியோரும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை மோசமாக விமர்சித்து வந்தனர்.
தற்போது ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தனி நபர் மீது மிகவும் அநாகரிகமாக விமர்சனம் செய்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நடிகை ஸ்ரீ ரெட்டி மீது குடிவாடா, அனகாபல்லி, ராஜமுந்திரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அவர் மீது போலீஸார், வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அவருக்கு நோட்டீஸ் வழங்கி விரைவில் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version