திருப்பதி: நவ. 13-
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 23 தங்குமிடங்களும் நிரம்பி இருந்தன. திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகைக்கும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாம். நவம்பர் 1 ஆம் தேதி திருமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தீபாவளியையொட்டி புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் ஏராளமானோர் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். நவம்பர் 12 ஆம் தேதி 61,446 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 21,374 பேர் முடி காணிக்கை கொடுத்தனர். உண்டியல் காணிக்கை 3.81 கோடி ரூபாய் ஆகும். சர்வ தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருந்தனர். அது போல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கும் மண்டபங்களில் 23 நிரம்பியிருந்தன. ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 3-4 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர். நவம்பர் 11 ஆம் தேதி 73,917 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 25,161 பேர் முடி காணிக்கை கொடுத்தனர். உண்டியல் காணிக்கை 4.82 கோடி ரூபாய் ஆகும். சர்வ தரிசனத்திற்கு 6 மணி நேரம் காத்திருந்தனர். அது போல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கும் மண்டபங்களில் ஒன்று மட்டும் நிரம்பியிருந்தது.