புதுடெல்லி: ஜூன் 23-
ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்து திட்டத்தின் மூலம் ஈரானில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரானில் உள்ள இந்திய தூதரகமும் மத்திய வெளியுறவு அமைச்சகமும் செய்து வருகிறது. இதுவரை 4 தனி விமானங்களில் மாணவர்கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்ளனர். இந்நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்களுடன் 5-வது விமானம் நேற்று மாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.இதன்மூலம் இதுவரை ஈரானிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,428-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இன்றும் நாளையும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதுதவிர, நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களையும் ஈரானிலிருந்து அழைத்துவர தேவையான உதவிகள் செய்யப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.