காங்டாக்: ஜூலை 28 –
எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 1967-ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய, சீன எல்லைப் பகுதிகளில் மோதல் ஏற்பட்டது.
அப்போது சிக்கிம் மாநிலத்தின் இமயமலை பகுதிகளான நாது லா, சோ லா – வில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நீடித்தது. இதில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர். சீன படை வீரர்கள் பின்வாங்கினர்.
இந்த சூழலில் இந்தியாவில் உள்ள 30 போர்க்களங்கள் சுற்றுலாதலமாக மாற்றப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜனவரியில் அறிவித்தார். இதன்படி சிக்கிம் மாநிலத்தில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் நாது லா
போர்க்கள பகுதி சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக சோ லா பகுதி சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
இதுகுறித்து சிக்கிம் மாநில கூடுதல் தலைமை செயலாளர் சி.எஸ். ராவ் கூறியதாவது:
கடந்த 2017-ம் ஆண்டில் சிக்கிமின் டோக்லாம் பகுதியில் இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. இந்த இடத்துக்கு அருகே உள்ள சோ லா பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிடப்படும். இவ்வாறு சி.எஸ். ராவ் தெரிவித்தார்.