Home செய்திகள் தேசிய செய்திகள் சீறும் இயற்கை 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

சீறும் இயற்கை 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

திருவனந்தபுரம்: ஜூன் 27-
கேரளாவில், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பத்தினம்திட்டா, மலப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள மூவாட்டுப்புழா ஆறு, திருச்சூர் மற்றும் மலப்புரம் வழியாக பாயும் பாரதப்புழா ஆறு, பத்தனம்திட்டாவில் அச்சன்கோவில் மற்றும் பம்பா ஆறுகள், கோட்டயத்தில் மணிமாலா, இடுக்கியில் தொடுபுழா ஆறு மற்றும் வயநாட்டில் கபானி உள்ளிட்ட பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது.வயநாடு, முண்டக்கை – -சூரல்மாலா பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் சூரல்மாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், பெய்லி பாலத்தின் அருகே கரைகளில் அரிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இதேபகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் நேற்று, அதி கனமழைக்கான, ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்தது. இதனால், நுாற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Exit mobile version