புதுடெல்லி: ஜூலை 18 –
ஹரியானாவின் குருகிராம் நில விவகார வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா (56). இவர் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2008 பிப்ரவரியில் ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ரூ.7.50 கோடியில் 3.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியது. இங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பூபேந்திர சிங் ஹுடா அனுமதி வழங்கினார். இதன் காரணமாக, நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
அதன்பிறகு, ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டாமல், டிஎல்எஃப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு அந்த நிலத்தை விற்பனை செய்தது. கட்டுமான உரிமத்தையும் அந்த நிறுவனத்துக்கு வழங்கியது.
இந்த நில விற்பனையில் பண மோசடி, முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ரார்ட் வதேராவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை சார்பில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: குருகிராம் நில விற்பனை மோசடியில் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போதைய காங்கிரஸ் அரசு, ராபர்ட் வதேராவுக்கு சாதகமாக செயல்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. வதேரா பரிந்துரை செய்தபடி, ஹரியானாவில் பல ஏக்கர் நிலத்தை டிஎல்எஃப் நிறுவனத்துக்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக் கியுள்ளது. இதன்மூலம் டிஎல்எஃப் நிறுவனம் ஆதாயம் அடைந்துள்ளது.
டிஎல்எஃப் மற்றும் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் இடையே நடைபெற்ற பண பரிமாற்றங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். பண மோசடி, முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.