Home செய்திகள் உலக செய்திகள் அடங்க மறுக்கும் ஈரான் – விடாமல் விரட்டும் ட்ரம்ப்: மீண்டும் வெடிக்கும் போர்?

அடங்க மறுக்கும் ஈரான் – விடாமல் விரட்டும் ட்ரம்ப்: மீண்டும் வெடிக்கும் போர்?

தெஹ்ரான்: ஏப்ரல் 11-
அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சைக்குப் பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது மீண்டும் ஒருமுறை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். அதாவது “ஈரான் ஒத்துழைத்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்” என அவர் கூறியிருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கும்போதே அவர் இப்படிப் பேசியிருப்பது விவாதமாக வெடித்துள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த போர் இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பும் 15 நாட்கள் தாக்குதலை நிறுத்தவும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன. அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் நிலையில், அதிபர் டிரம்ப் வழக்கம் போல சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். ஹார்முஸ் தொடர்பான அவரது கருத்துகள் விவாதமாக வெடித்துள்ளது.உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் பயணிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் இந்த முக்கியமான கடல்வழிப் பாதையைத் தற்காலிகமாக முடக்கியது. இது உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இதனால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்தது. இப்போது ஒரு மாதம் கழித்து மீண்டும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அமெரிக்கச் சார்பில் துணை அதிபர் வேன்ஸ் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறார். ஈரான் தரப்பில் இருந்தும் முக்கிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் விரைந்துள்ளனர்.
இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வழக்கம் போலத் தன் ஸ்டைலில் ஈரான் குறித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் கடற்படையும், விமானப் படையும் செயலிழந்துவிட்டன. இப்போது பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வந்தே ஆக வேண்டும். அவர்கள் வரவில்லை என்றாலும், ஹார்முஸை பாதையை நாங்களாகவே திறப்போம்!” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.