
துபாய்: மார்ச் 12-
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. இதில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜல சந்தி வழியாக, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியிருந்தது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி பகுதி எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிகமிக முக்கியமானதாக உள்ளது. இந்தப் பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கடல் கண்ணிவெடிகளை வைக்கும் பணியிலும் ஈரான் ஈடுபட்டது. இதனால், ஈரான் போர்க் கப்பல்கள் மற்றும் கண்ணிவெடி வைக்கும் பணியில் ஈடுபட்ட கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலிபா துறைமுகத்தில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த ‘மயூரி நாரி’ என்ற எண்ணெய்க் கப்பலில் இந்தியாவுக்காக 30,000 டன்கள் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டது. இந்த கப்பல் குஜராத்தின் கண்டலா துறைமுகத்துக்கு வர வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வந்தபோது, இந்த கப்பல் மீது மர்மமான முறையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. உடனே கப்பலில் இருந்த 20 ஊழியர்கள் மிதவை மூலம் கடலில் குதித்து தப்பினர். அவர்களை ஓமன் கடற்படை காப்பாற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டது. கப்பலில் இருந்த 3 ஊழியர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. 178 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட ஆயில் டேங்கர் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக ஓமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


















