
புதுதில்லி, மார்ச் 24 – ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்வை… 5 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்களுக்கு வெளியே சென்றதில்லை. ஆனால், கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல் 7-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, அதன் தொடர்ச்சியாக 2025-ல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதன் மூலம், தனது வரலாற்றிலேயே முதல்முறையாகத் தொடர்ந்து இரண்டு முறை பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் சிஎஸ்கே ஏமாற்றம் அளித்தது. இருப்பினும், கடந்த சீசனில் சிஎஸ்கே நல்ல படிப்பினையை கற்றுக்கொண்டது. அது மாற்றத்துக்கான இளம் வீரர்களின் சக்தி. ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டதைக் கண்ட அணி நிர்வாகம், ‘டாடி ஆர்மி’ (வயதான வீரர்களை அதிகம் உள்ளடக்கிய அணி) என்ற பிம்பத்திலிருந்து விலகி, துடிப்புள்ள இளம் வீரர்களின் திறனை நம்பி ஒரு புதிய பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக 3-வது முறையாக முதல் நான்கு இடங்களுக்கு வெளியே செல்வதை தவிர்க்க, இந்த ‘இளைஞர் படை’ இந்த ஆண்டு கை கொடுக்கும் என்று சிஎஸ்கே அணி பெரிதும் நம்புகிறது. இளைஞர்களே அச்சாணி… கடந்த சீசனில் தொடக்க ஆட்டங்களில் பவர்பிளேவில் ரன்கள் சேர்க்க சிஎஸ்கே தடுமாறியது. இதன் பின்னர் தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே, மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனான தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரின் வருகைக்கு பின்னரே ரன் குவிப்பில் சிஎஸ்கே அணி உத்வேகம் பெற்றது



















