
புதுடெல்லி: ஏப்ரல் 6 –
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது.
உலகின் 3-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அமெரிக்காவின் இந்த அழுத்தம் காரணமாக, மே 2019-க்குப் பிறகு ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை.
இந்த சூழலில் மேற்கு ஆசிய போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிய சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, ஈரானிய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியது. இந்நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இது குறித்து மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஈரானில் இருந்து குஜராத் மாநிலம் வாடினார் நோக்கி வந்த கச்சா எண்ணெய் கப்பல் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக பரப்பப்படும் செய்திகளும், சமூக ஊடகப் பதிவுகளும் உண்மைக்குப் புறம்பானவை. 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது.


















