
பாக்தாத்: மார்ச் 13-
ஈரான் போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 வகை வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்குப் பொறுப்பான அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது தவறுதலான சொந்தப் படைத் தாக்குதலாலோ ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குவைத்திற்கு மேலே தவறுதலாகச் சுடப்பட்ட மூன்று F-15 போர் விமானங்களுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் நடக்கும் இந்தப் போரின் போது அமெரிக்க ராணுவம் இழக்கும் குறைந்தது நான்காவது விமானம் இந்த KC-135 ஆகும். அமெரிக்க விமானப்படையின் தகவல்படி, 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள KC-135 விமானங்கள் பொதுவாக விமானி, துணை விமானி மற்றும் பிற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் கருவியை இயக்குபவர் என மூன்று பேரைக் கொண்ட குழுவினரால் இயக்கப்படுகிறது. இருப்பினும், சில குறிப்பிட்ட பணிகளுக்கு வழிகாட்டி ஒருவரும் தேவைப்படலாம் என்றும், இந்த விமானத்தில் 37 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்றும் அமெரிக் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரானுடனான போரின் ஆரம்பக் கட்டத்தில், குவைத் படைகள் தவறுதலாக மூன்று அமெரிக்க F-15E ரகப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தின. ஆனால் அந்த விமானங்களில் இருந்த ஆறு ஊழியர்களும் பாராசூட் மூலம் குதித்து தப்பிவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. ஈரானிய விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் உள்ளிட்ட கடுமையான போர்ப் பயிற்சிகளின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அப்போதே அமெரிக்க ராணுவத் தலைமையகம் குறிப்பிட்டிருந்தது.















