
புதுடெல்லி: மார்ச் 6-
இஸ்ரேல், ஈரான் போரால் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (ஐஆர்இஎப்), வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் (ஏபிஇடிஏ) சமர்ப்பித்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், துறைமுகங்களில் 2 லட்சம் மற்றும் நடு வழியில் 2 லட்சம் என மொத்தம் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டு பிரீமியம் மற்றும் போர்க்கால கூடுதல் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதனால் சர்வதேச சரக்கு போக்குவரத்து கட்டணம் 15-20% வரை அதிகரித்துள்ளது. மேலும் கப்பல் எரிபொருள் விலை ஒரு டன்னுக்கு 520 டாலரிலிருந்து 580 டாலராக உயர்ந்துள்ளது.இந்த போக்குவரத்து இடையூறுகளால் உள்நாட்டிலும் கடந்த 72 மணி நேரத்தில் பாசுமதி அரிசியின் விலை 7-10% வரை சரிந்துள்ளது. இது ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதனத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய கோரிக்கைகள் போர் பதற்றம் காரணமாக கப்பல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் துறைமுகங்களில் தேங்கும் சரக்குகளுக்கான சேமிப்பு மற்றும் தாமதக் கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பாதியில் நிற்கும் சரக்குகளைத் திருப்பி அனுப்ப அல்லது வேறு இடத்துக்கு மாற்ற சுங்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் உரிய ஆவண உதவிகளை வழங்க வேண்டும். இந்த நெருக்கடியை ஒரு ‘தவிர்க்க முடியாத சூழலாக’ அறிவிக்க வேண்டும். இதன் மூலம் ஒப்பந்தங்களை நிறை
வேற்றத் தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதங்களைத் தவிர்க்க முடியும்.
கரோனா தொற்று காலக்கட்டத்தில் வழங்கப்பட்டது போன்ற கூடுதல் கடன் வசதிகள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை வங்கிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
















