
வாஷிங்டன்: மார்ச் 31 –
ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள வெடிமருந்து கிடங்கை குறிவைத்து அமெரிக்கா பங்கர் குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் இஸ்ஃபஹான் அதிர்ந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் தீ கொழுந்து விட்டு எரிகின்றன. இந்தக் காட்சிகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியது.
ஈரான் – அமெரிக்கா போரால் வளைகுடா நாடுகளில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரான் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து இருப்பதாகவும் அத்த நாட்டின் மீது வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்படும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பை நிராகரித்த ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் போர் நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டு ஈரானின் மீது தரைவழி படையெடுப்புக்கு அமெரிக்கா தயாராகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஈரான் – அமெரிக்கா போரால், ஹார்மூஸ் ஜலந்தியில் போக்குவரத்து பாதிப்பு, எண்ணெய் விநியோகம் பாதிப்பு ஆகியவற்றால் சர்வதேச அளவில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. டிரம்ப் பகிர்ந்த வீடியோ இதற்கிடையே ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் நகரில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், தொடர்ந்து வெடிப்புகளும் கொழுந்துவிட்டு தீ எரியும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தீப்பிழம்புகளால் அந்த பகுதியே ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
டிரம்ப் வெறும் வீடியோ மட்டுமே பகிர்ந்துள்ளாரே தவிர இது பற்றிய வேறு எந்த விரிவான தகவலையும் தெரிவிக்கவில்லை. இஸ்ஃபஹான் நகரத்தில் உள்ள வெடிமருந்து கிடங்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. ஈரானின் முக்கிய நகரமாக உள்ள இஸ்ஃபஹானில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். 907 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் பாதர் ராணுவ விமானப்படை தளமும் இங்குதான் உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:- இஸ்ஃபஹான்நகரில் உள்ள ஈரான் வெடி மருந்து கிடங்கில் 907 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பங்கர் குண்டுகள் என்பது செங்குத்தாக தரையில் விழுந்து தரைதளத்தை துளைத்து சென்று வெடிக்கும் தன்மை கொண்டது. கிடங்குகள் பாதாள அறைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இத்தகைய பங்கர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான், எகிப்து, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முயன்றுள்ள நிலையில் அமெரிக்கா நடத்தியிருக்க கூடிய இந்த தாக்குதலால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இஸ்ஃபஹான் நகரில் உள்ள பாதள மையத்தில் இருந்து அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை ஈரான் வேறு இடத்திற்கு கொண்டு சென்று இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. செறிவூட்டப்பட்ட இந்த யூரேனியம் சுமார் 540 கிலோ இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு கோடைக்காலத்திலும் இதே மாதிரியான தாக்குதலை ஈரான் மீது அமெரிக்கா நடத்தியிருந்தது. நள்ளிரவில் ஆபரேஷன் ஹம்மர் என்ற பெயரில் ஈரான் மீது அமெரிக்கா நடத்தியது.



















