
மதுரை: மார்ச் 7-
நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி, 4-வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்குநேரி அருகே கடந்த 2-ம் தேதி ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில், ஒடிசா தொழிலாளி திரிநாத் கட்டா மற்றும் பெரும்பத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஜான் ஆகிய 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக, 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், மஞ்சங்குளம் மகாராஜன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதனால், இச்சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் வரை, உடலை வாங்க மறுத்து நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே வேளையில் ஒடிசா தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் முறையீடு இதனிடேயே நாங்குநேரி சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் ஆஜராகி, எந்தக் காரணமும் இல்லாமல் கொலை செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்துக்குத் தேவையான நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரினார்.
பின்னர் நீதிபதிகள், நாங்குநேரி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாக தகவல் பெற்று நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.















