
பெங்களூரு: மார்ச் 30-
கர்நாடக மாநிலத்தில் புதிய நிதியாண்டின் முதல் நாளிலேயே மக்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு அதிர்ச்சி காத்திருக்கிறது. உயர்வின் வெப்பம் தட்ட வாய்ப்புள்ளது. கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்துவது குறித்து இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
யூனிட்டுக்கு 40-50 பைசா உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பெஸ்காம் உட்பட ஐந்து எஸ்காம்களின் முன்மொழிவின்படி, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சுமார் 40 முதல் 50 பைசா வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. நஷ்டத்தில் இருக்கும் மின் விநியோக நிறுவனங்கள் வருவாய் பற்றாக்குறையை சரிசெய்ய இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
வீட்டு உபயோகிப்பாளர்கள், வணிகப் பயன்பாட்டாளர்கள், தொழில் துறை ஆகிய மூன்று பிரிவினருக்கும் கட்டண உயர்வின் நேரடி பாதிப்பு ஏற்படும்.

கிருஹ ஜோதி’ திட்டத்தின் கீழ் 200 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கட்டணத்தை அரசே ஏற்பதால், அவர்களுக்கு நேரடி சுமை இருக்காது. ஆனால் 200 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்கள் அதிகரித்த விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்.
நிலைக்கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது.
யூனிட் கட்டணம் மட்டுமின்றி, நிலைக்கட்டணத்தையும் உயர்த்த வாய்ப்புள்ளது. வணிக மின் கட்டணம் உயர்ந்தால் ஹோட்டல், சிறு தொழில்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து, அதன் விளைவாக பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
பெங்களூரு மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி; ஏப்ரல் 1 முதல் பெங்களூருவில் தண்ணீர் கட்டணமும் 3 சதவீதம் உயர்வு அமலுக்கு வரும்.
தண்ணீர் விநியோகச் செலவு அதிகரிப்பு, பராமரிப்புச் செலவு உயர்வு, மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் ஜலமண்டலியின் (நீர் வாரியம்) நிதி நெருக்கடியைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டே ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் விலையை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது, அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று ஜலமண்டலி தலைவர் ராம் பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
ஏப்ரல் 1 முதல் மின்சாரம் மற்றும் தண்ணீர் விலை உயர்வால் பெங்களூரு மக்களுக்கு இரட்டிப்பு நிதிச் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. அரசின் கேரண்டி திட்டங்களுக்கு மத்தியிலேயே இந்த விலை உயர்வு மக்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
















