
புதுடெல்லி: மார்ச் 12-
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அஸாம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இதன்படி ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் வாக்குப்பதிவு நடக்கலாம் என்றும், மே மாதம் வாக்கு எண்ணிக்கை இருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் கூறி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் பதவிக்காலம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் பதவியின் பதவிக்காலம் மே 7ஆம் தேதியுடனும், கேரளாவில் சிபிஎம் ஆட்சிக்காலம் மே 23ஆம் தேதியுடனும், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக ஆட்சியின் ஜூன் 15ஆம் தேதியுடனும், அஸாமில் மே 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. 5 மாநிலங்களில் மொத்தமாக உள்ள 824 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையர்கள் குழு ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து பேசி வருகிறது. இதன் காரணமாக 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே மார்ச் 15ஆம் தேதி 5 மாநில தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் தேதி அட்டவணை அறிவிப்பது தொடர்பாக டெல்லி இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. அதிகாரிகள் தரப்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதேபோல் மேற்கு வங்கம் சட்டசபைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்த பின், மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரப்படுத்திவிட்ட சூழலில், தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.


















