
புதுடெல்லி: மார்ச் 10-
ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு பேரலின் விலை 100 டாலரை தாண்டியது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் வயல்கள் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான எண்ணெய் வயல்கள் மூடப்பட்டு உள்ளன.
மேலும் ஹார்முஸ் வளைகுடாவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கி உள்ளது. இந்த வளைகுடா வழியாக உலகின் 25% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியிருப்பதால் அதன் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஈரான் போருக்கு முன்பாக ஒரு பேரல் (159 லிட்டர்) கச்சா எண்ணெய் விலை 65 டாலர் முதல் 70 டாலராக இருந்தது.
போருக்கு பிறகு படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் ஒரு பேரல் பிரன்ட் கச்சா எண்ணெய் 120 டாலரை எட்டியது. பின்னர் படிப்படியாகக் குறைந்து 100 டாலரை ஒட்டி வர்த்தகமானது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டனில் 2 நாட்களுக்கு தேவையான இயற்கை எரிவாயு மட்டுமே இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவின் உதவியை உலக நாடுகள் நாடி உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் படிப்படியாக குறைத்து வந்தன. தற்போதைய சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இந்திய நிறுவனங்கள் மீண்டும் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றன.


















