
அகமதாபாத், ஏப்ரல் 17- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் வெற்றிக்காக ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்து ஆகியிருந்தது. இதனால் அந்த அணி ஒரு புள்ளியுடன் 10 அணிகள் கலந்துகொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியின் பந்துவீச்சு பலம் இழந்து காணப்படுகிறது. தொடர் தொடங்குவதற்கு முன்பே ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் ஆகியோர் காயம் காரணமாக விலகினர். சில பிரச்சினைகளால் பிசிசிஐ-யின் உத்தரவின்படி முஷ்டாபிஷுர் ரஹ்மானும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஜிம்பாப்வேயை சேர்ந்த பிளெஸ்ஸிங் முசாரபானியிடம் இருந்து எதிர்பார்த்த அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஃபார்மில் இல்லாதது கொல்கத்தா அணியின் சுமையை இரட்டிப்பாக்கி உள்ளது. சுனில் நரேன் நடப்பு தொடரில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினாலும் விக்கெட்கள் வீழ்த்த சிரமப்பட்டு வருகிறார். இதுவரை அவர், 3 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதேவேளையில் வருண் சக்ரவர்த்தி இன்னும் விக்கெட் வேட்டையை தொடங்கவில்லை. இது ஒருபுறம் இருக்க மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எடுக்கப்பட்ட சில முடிவுகளால் கொல்கத்தா அணியின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்துள்ளன. டிம் ஷெய்பர்ட், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்களை விளையாடும் லெவனில் சேர்க்காமல் புறக்கணித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், டாஸ் வென்ற பிறகு அவர்கள் எடுத்த முடிவுகளும் குழப்பம் விளைவிப்பதாகவே உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய ரஹானே எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சில தவறான முடிவுகளை ரஹானே எடுத்திருந்தார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 220 ரன்களைக் குவித்தும், அதனைத் தக்க வைக்க முடியாமல் தோற்றது அந்த அணியின் மோசமான தொடக்கத்திற்கு அச்சாரமிட்டது. அதனைத் தொடர்ந்து, சொந்த மண்ணிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த படுதோல்வி, அணியின் வீழ்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியது. ஒட்டுமொத்தமாக கொல்கத்தா அணி சரியான திசையில் பயணிக்காமலும் தெளிவான இலக்கு இல்லாமலும் காட்சியளிக்கிறது.





















