
சீதாப்பூர்: மார்ச் 27-
உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் பகைன் கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோபால் (26). சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பகைன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. அன்று மாலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. கிராம மக்கள் திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.கோபாலின் இறுதிச் சடங்குகளை அவரது அண்ணன் மன்மோகன் தயால் நிறைவேற்றினார். ரவி கோபாலுக்கு மனைவி, பெற்றோர் மற்றும் நான்கு வயது மகன் உள்ளனர். இந்நிலையில் தங்கள் குடும்பம் ஏழ்மையில் இருப்பதால் உரிய இழப்பீடும் ரவி கோபாலின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கை தொடர்பாக பரிசீலித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


















