
சென்னை: ஏப்ரல் 8-
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகிற ஏப்ரல் 10-ந்தேதி முதல் ரொக்க பணம் செலுத்தும் பணபரிவர்த்தனை முறை முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. செல்லுபடியாகும் பாஸ்டேக் இல்லாமலும் அல்லது அதில் போதிய பணம் இல்லாமல் வாகனம் சுங்கச்சாவடிக்கு வந்தால், பயனாளர்கள் யு.பி.ஐ. மூலம் கட்டணம் செலுத்தலாம். ஆனால், அந்த வாகன வகைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட 1.25 மடங்கு வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகிற 10-ந்தேதி முதல் ரொக்க பணம் செலுத்தும் பணபரிவர்த்தனைமுறை முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்படி டிஜிட்டல் முறைக்கு சுங்கச்சாவடிகள் மாறுவதால், அங்கு ஒரு நாளில் கடந்து செல்லும் வாகனங்களின் அளவை துல்லியமாக அரசால் அறிய முடியும். முறைகேடுகளுக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சுங்கச்சாவடிகளில் கடக்கும் வாகனங்கள் பாஸ்டேக் வைத்திருக்க வேண்டும். ரொக்க பண பரிவர்த்தனைக்கு அனுமதி கிடையாது.
செல்லுபடியாகும் பாஸ்டேக் இல்லாமலும் அல்லது அதில் போதிய பணம் இல்லாமல் வாகனம் சுங்கச்சாவடிக்கு வந்தால், பயனாளர்கள் யு.பி.ஐ. மூலம் கட்டணம் செலுத்தலாம். ஆனால், அந்த வாகன வகைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக 25 சதவீதம் (1.25 மடங்கு) வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை குறைக்கவும், பயணத்தை மேலும் சீராக மாற்றவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருககிறது. பாஸ்டேக் முறையை முதன்மையான கட்டண முறையாகவும், யு.பி.ஐ.யை மாற்றுவழியாக மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றால் 72 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும்.
தவறினால் கட்டணம் இருமடங்காகும். 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் அந்த வாகனம் ‘வாஹன்’ தளத்தில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும் அரசு ஊழியர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காட்டி கட்டண விலக்கு பெறும் முறையும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு அனைத்து சுங்கச்சாவடிகளையும் காகிதமில்லாத மற்றும் பணமில்லாத இடமாக மாற்ற விரும்புகிறது. அடையாள அட்டையைக் காட்டுவது என்பது ஒருவரை நேரடியாகச் சரிபார்க்க வேண்டிய முறை என்பதால் அங்கு டைம் எடுக்கிறது. அடையாள அட்டையைச் சரிபார்க்கும்போது ஒவ்வொரு வாகனமும் குறைந்தது 1 முதல் 2 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இது பின்னால் வரும் வாகனங்களுக்கு நெரிசலை ஏற்படுத்துகிறது.
‘பாஸ்டேக்’ மூலம் தானியங்கி முறையில் கட்டணம் கழிக்கப்படும்போது, வாகனங்கள் நிற்காமல் செல்ல முடியும். அடையாள அட்டையைக் காட்டி விலக்கு பெறும் முறையைச் சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவது அல்லது தகுதியற்றவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி விலக்கு பெறுவது போன்ற முறைகேடுகளைத் தவிர்க்க, “பாஸ்டேக்” போன்ற தொழில்நுட்ப முறை மிகவும் பாதுகாப்பானதாக அரசு கருதுகிறது. நெடுஞ்சாலைப் பயணத்தில் அனைவரும் சமமான விதிகளுக்கு உட்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும், வரிசையில் நிற்கும் மற்ற பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


















