
புதுடெல்லி: ஏப்ரல் 3-
நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐ மூலம் கடந்த மார்ச் மாதத்தில் 2,264 கோடி முறை பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனை புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை தனது எக்ஸ் தளத்தில், “மார்ச் மாதத்தில் யுபிஐ வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,264 கோடியை எட்டியுள்ளது. இதன் மதிப்பு ரூ.29.53 லட்சம் கோடியாகும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொண்டு, இந்த புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் இந்திய மக்களுக்கு நன்றி. நமது பணப் பரிவர்த்தனை முறையை மாற்றியமைக்கும் இந்தப் பயணம் தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 1,830 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 24 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 2,039 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள், தற்போது மார்ச் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளன.ரிசர்வ் வங்கியின் இருமுனைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, எளிய மற்றும் பாதுகாப்பான முறையில் யுபிஐ செயல்படுகிறது. இதில் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ரகசிய பின் எண் ஆகிய இரு அடுக்கு பாதுகாப்பு வசதிகள் உள்ளதால் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணத்தைப் பரிமாற்ற முடிகிறது. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85 சதவீதத்தை யுபிஐ பிடித்துள்ளது.தேசிய அளவைத் தாண்டி சர்வதேச அளவிலும் யுபிஐ தனது முத்திரையைப் பதித்து வருகிறது. யுஏஇ, சிங்கப்பூர், பூடான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய ஏழு நாடுகளில் தற்போது நமது யுபிஐ சேவை நடைமுறையில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக பிரான்ஸில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.


















