Home செய்திகள் தேசிய செய்திகள் தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு

தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு

புதுடெல்லி: மே 13-
தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்குவதை மக்கள் தவிர்ப்பதும், தள்ளிப் போடுவதும் நடக்கும் எனத் தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டு காலம் தவிர்க்க வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருருந்த நிலையில், தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
உலக அளவில் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இதோடு வெள்ளியையும் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்திய தேசம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகளவில் தங்கம் வாங்கி வருவதாக தகவல். உலகளாவிய தங்கத்தில் சுமார் 11 சதவீதம் இந்திய குடும்பங்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்கம் சார்ந்த கோல்டு இடிஎஃப்-பில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில்தான் தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்கத்தின் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதில் 10 சதவீதம் அடிப்படை சுங்க வரி என்றும், 5 சதவீதம் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூடுதல் வரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தங்கம் உள்ளிட்ட உலோக இறக்குமதியை குறைப்பது, வர்த்தகப் பற்றாக்குறையை மட்டுப்படுத்துவதுதான் அரசின் திட்டம் என வர்த்தக துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 2024 ஜூலையில் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது. தற்போது அதை 15 சதவீதமாக அரசு உயர்த்தி உள்ளது. இதுமட்டுமல்லாது தங்கத்தின் மீது ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.