Home செய்திகள் உலக செய்திகள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம்.. இலங்கை அதிபர் முக்கிய உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம்.. இலங்கை அதிபர் முக்கிய உத்தரவு

கொழும்பு: ஜூலை 7-
இலங்கையின் முக்கியமான சிறைகளில் ஒன்றான நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்கள் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு, சம்பவத்திற்கான காரணங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற மோதல்கள் நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைளை பரிந்துரை செய்யுமாறு குழு ஒன்றினை இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க அமைத்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் மேல் சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார், அதிரடிப்படை போலீசார், கலகத் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர். அப்போது நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வானை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையே சிறையில் தங்கள் உறவுகளை பறிக்கொடுததவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின குடும்பத்தார் சிறைச்சாலையைச் சூழ்ந்து தமது உறவுகளின் நிலையை எண்ணி செய்வதறியாது கண்ணீர் மல்க வேதனையை வெளிப்படுத்தினார்கள். இந்த சூழலில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு, சம்பவத்திற்கான காரணங்கள், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிக்க இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.