Home விளையாட்டு பல கோடி சம்பளம் வாங்கும் இளம் வீரர்களை எச்சரித்த பதான்

பல கோடி சம்பளம் வாங்கும் இளம் வீரர்களை எச்சரித்த பதான்

மும்பை, மார்ச் 21 – ஐபிஎல் தொடர் என்பது பல இளம் வீரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியமைத்த ஒரு தளமாகும். ஏலத்தில் கோடிக்கணக்கில் விலைபோகும் அறிமுகமில்லாத வீரர்கள் உடனடியாக புகழின் உச்சிக்கு செல்கின்றனர்.
ஆனால், இந்த மிகப்பெரிய தொகை அவர்களுக்குக் களத்தில் மிகப்பெரிய அழுத்தத்தையும் கொடுக்கிறது. 2026 ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் அவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுபற்றி பேசிய இர்பான் பதான், இளம் வீரர்களின் மனநிலையை அதிக ஏலத்தொகை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்து விளக்கினார். “களத்தில் அழுத்தத்தை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதே மிகப்பெரிய விஷயம். ஐபிஎல் தொடர் என்பது ஒருநாள் உங்களை ஹீரோவாக்கும், மறுநாளே உங்களை காணாமல் போகச் செய்துவிடும். ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து வாங்கப்படும் வீரர்கள், அடுத்த சீசனில் மோசமாக விளையாடி, பின்னர் எந்த அணியாலும் கண்டுகொள்ளப்படாமல் போவதை நாம் நிறைய பார்த்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இளம் வீரர் பிரசாந்த் வீர் குறித்து இர்பான் பதான் குறிப்பாகப் பேசினார்.
“14 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கப்பட்டுள்ள பிரசாந்த் வீர் போன்ற வீரர்கள், நெருக்கடியான சூழ்நிலைகளில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். குறிப்பாக, ஆட்டத்தின் கடைசி 4 ஓவர்களில் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் நெருக்கடி ஏற்படும்போது அவர்கள் எப்படிப் செயல்படுகிறார்கள் என்பது மிகவும் முக்கியம்” என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், “ஒரு வீரர் மீது இவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சில போட்டிகளில் சொதப்பினால் என்ன நடக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அந்தச் சரிவிலிருந்து அவர் தன்னை எப்படி மீண்டும் தயார்படுத்திக் கொண்டு, நம்பிக்கையுடன் களத்திற்கு வருகிறார் என்பதே அவரது உண்மையான திறமையைக் காட்டும்” என்றும் குறிப்பிட்டார்.